கண்ணடித்த சமாஜ்வாடி பிரமுகரின் பாடிகார்ட்... கார் கண்ணாடியை உடைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பெண்!
ஆக்ரா: தன்னைப் பார்த்து கண்ணடித்த சமாஜ்வாடி பிரமுகரின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, சம்பந்தப்பட்ட பெண் காரை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் ஆக்ராவில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று ஆக்ராவில் 23 வயது சாத்வி பாண்டே என்ற பெண் தன்னுடைய சகோதரியுடன் டாக்டரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, அவரது ஸ்கூட்டர் அருகே நின்ற சமாஜ்வாடி கட்சிப் பிரமுகரான அபினவ் சர்மாவின் காரிலிருந்த பாதுகாவலர் அப்பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ஸ்கூட்டரில் இருந்து இறங்கி சம்பந்தப்பட்ட பாதுகாவலர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பெண், சமாஜ்வாடி பிரமுகரின் கார் மீது ஏறினார்.
காரின் முன்பக்கம் பறந்த கட்சிக் கொடியை பிடுங்கி வீசிய அப்பெண், அந்தக் கம்பியால் காரின் முன்புறக் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். மேலும் இந்த அமளியின்போது அந்தப் பாதுகாவலர் தனது செல்போனை உடைத்து விட்டதாகவும், அதற்காக ரூ. 6500 பணம் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை எழுப்பி போராட்டம் நடத்தினார்.
அப்பெண்ணின் அடுத்தடுத்த தாக்குதல்களால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது அபினவ் சர்மா காரில் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
தற்போது இந்தக் காட்சிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.