உங்கள் கணக்கு இங்கு பலிக்காது.. உச்சநீதிமன்ற நீதிபதியிடம் கர்நாடக வக்கீல் ஆவேசம்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோக்தகி தாக்கல் செய்த மனு, மற்றும் தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்ய கர்நாடகா தாக்கல் செய்த மனு ஆகியவை இன்று, அமித் மிஸ்ரா மற்றும் லலித் குமார் ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், சுப்ரீம் கோர்ட் இஷ்டப்படியெல்லாம் தமிழகத்திற்கு தண்ணீர் விடச்சொல்வதாக குற்றம்சாட்டினார். ஒருநாள் 15 ஆயிரம் கன அடி நீரை திறக்கச் சொல்கிறீர்கள், இன்னொருநாள் விசாரணையின்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்கச் சொல்கிறீர்கள். இன்னொரு நாள் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை விட சொல்கிறீர்கள்.
எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் இப்படி உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்பதே எங்களுக்கு புரியவில்லை. இருந்தாலும், நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து நாங்கள் தண்ணீர் திறந்துவிட்டோம் என்றார்.
நீங்கள் எந்த அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டீர்கள் என்று நாரிமன் கேட்டதும், நீதிபதி அமித் மிஸ்ரா, கணிதத்தின் அடிப்படையில் என பதில் அளித்தார்.
அப்போது பேசிய நாரிமன், வெறும் கணிதம் மட்டுமே தண்ணீர் பிரச்சினையில் தீர்வை தராது. கள நிலவரத்தை ஆய்வு செய்து பார்த்து தயவு செய்து உத்தரவை பிறப்பியுங்கள்.
கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகாவால் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் நிலை மோசமாக உள்ளது என்பதை நானும் அறிந்துள்ளேன். இருந்தாலும் கூட, கோர்ட் உத்தரவை மீறிவிட்டது தப்புதான். எனவேதான், நானே கர்நாடக தரப்பை கண்டித்தேன். கடந்த முறை வாதிடுவதை கூட தவிர்த்தேன். எனவே, மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு, என்னை மீண்டும் தர்ம சங்கடத்தில் சிக்க வைத்துவிடாதீர்கள் என்றார் நாரிமன்.
இதையேற்ற நீதிமன்றம், கர்நாடகா அணைகளை ஆய்வு செய்து அறிக்கை தர காவிரி மேற்பார்வை குழுவுக்கு உத்தரவிட்டது. அது
குறித்த ஆய்வு அறிக்கையை அக்டோபர் 17க்குள் தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.