ராம்தேவ் போல.. கேரள பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயிக்கும் இசெட் பிரிவு பாதுகாப்பு!
டெல்லி: யோகா குரு என அழைக்கப்படும் சாமியார் பாபா ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயிக்கும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் கொல்லம் பகுதியிலுள்ள ஆசிரமத்தை தலைமையிடமாக கொண்டு நாடு முழுக்க ஆன்மீக நிறுவனங்கள் நடத்தி வருபவர் 64 வயதாகும் பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயி.
40க்கும் மேற்பட்ட நாடுகளில் அறக்கட்டளைகளையும், நாட்டின் பல பகுதிகளில் கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார் பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயி. இவருக்கும், ஆசிரமத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையை தொடர்ந்து, இசெட் பிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் சாமியார் மாதா அமிர்தானந்த மயியை கொண்டுவர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரமத்தில் பாதுகாப்பு
சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் 24 மணி நேரமும் மாதா அமிர்தானந்த மயி, ஆசிரமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மாதா அமிர்தானந்த மயி எங்காவது பயணிக்கும்போது அவரது காரின் முன்பும், பின்பும், இரு எஸ்கார்ட் வாகனங்களும் பின்தொடருமாம்.
ராம்தேவுக்கும் பாதுகாப்பு
யோகா குரு பாபா ராம்தேவுக்கு பிறகு, இசட் பிரிவு பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது கவனிக்கத்தக்கது. ராம்தேவுக்கு பாதுகாப்பு வழங்கியபோது சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், அசராமல் கேரள பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
பாஜகவுடன் நெருக்கம்
கடந்த வருடம், மாதா அமிர்தானந்த மயி பிறந்த நாளின்போது, கொல்லம் ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில், பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். பிரதமர் மோடி தனது ஒரு உரையின்போது, அமிர்தானந்தமயியை புகழ்ந்து பேசியிருந்தார்.
அரசியல் லாப நோக்கம்?
பாஜக அரசின் இந்த செயல்பாடு, கேரளாவில், பிரிந்து கிடக்கும் பல ஜாதி இந்துக்களையும், ஒரே குடையின் கீழ் திரட்டி, இடதுசாரிகளை எதிர்க்கும் அரசியல் நகர்வு என அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதே பாணியில் பாஜக காய் நகர்த்தி மிகப்பெரிய தேர்தல் வெற்றியை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.