பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்
கொல்கத்தா: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜொமாட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தங்களது நிறுவன டீ சர்ட்டை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு சீன நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் பினான்சியல் என்ற நிறுவனம் ஜொமாட்டோவில் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது. மேலும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யுமாறு ஆன்ட் நிறுவனத்தை ஜொமாட்டோ கேட்டுக் கொண்டது.
கொரோனா ஒழிந்தாலும் அதிகரிக்கும் மன அழுத்தம் எச்சரிக்கும் நிபுணர்கள் - மதுரையில் கவுன்சிலிங்
வீரமரணம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு அருகே அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் இந்தியா கொடுத்த பதிலடியால் சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
முதலீடு
இதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என இந்திய மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீன நிறுவனத்திடமிருந்து முதலீட்டு பெறும் ஜொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினர். நிறுவனத்தின் டீ சர்ட்டை கிழித்தும் தீ வைத்து எரித்தும் போராடினர். சீன முதலீட்டில் செயல்படும் இந்த நிறுவனத்தில் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்றனர்.
லாபம்
இந்தியாவில் இருந்து கொண்டு சீன நிறுவனங்கள் லாபம் ஈட்டிக் கொண்டு வருகின்றன. நம் நாட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நம் மண்ணை கொள்ளையடிக்கும் முயற்சியில் உள்ளார்கள். இதை அனுமதிக்க முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
போராட்டக்காரர்கள்
சீனாவிலிருந்து முதலீடு பெறும் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதை விட பட்டினி கிடப்பதே மேல் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து ஜொமாட்டோ நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. கொரோனா லாக்டவுனால் மே மாதம் ஜொமாட்டோவில் 520 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.