மத்திய ஆப்பிரிக்க குடியரசில் அதிபர் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மோதல்: 100 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அதிபராக இருந்தவர் பிரான்காய்ஸ் போசிசீ. அவரது அரசை மிகேல் ஜோடோடியா கடந்த மார்ச் மாதம் கவிழ்த்தார், அதன் பிறகு மிகேல் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இடைநிலை அரசின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இது சதி போன்று உள்ளது என்று கூறி கண்டனம் எழுந்தது.
இதையடுத்து பிரான்காய்ஸின் ஆதரவாளர்களுக்கும், மிகேலின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்பட்ட மோதல்களில் 100 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த மோதல்களால் தலைநகர் பாங்குய்யின் வடமேற்கு பகுதிகளில் பொஸ்ஸாங்கோ மற்றும் பௌகா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்காய்ஸ் ஆதரவாளர்கள் தங்கள் தலைவரை மீண்டும் அதிபர் பதவிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பிரான்காய்ஸின் செய்தித் தொடர்பாளர் லெவி யகேடே கூறுகையில்,
பிரான்காய்ஸை மீண்டும் அதிபர் பதவிக்கு கொண்டு வர முன்னாள் ராணுவ வீரர்கள் தான் தாக்குதல்களை நடத்தினர். தேர்தல் தான் இந்த இடைநிலை அரசின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொண்டு வரும். என்றார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு 1960ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்குள்ள அரசுகள் பல முறை கவிழ்க்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.