புகுஷிமா அணு உலையில் சேமிக்கப்பட்டிருந்த 100 டன் கதிரியக்க நீர் கசிவு: அதிர்ச்சி தகவல்
புகுஷிமா: புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 100 டன் அசுத்த கதிரியக்க நீர் கொள்கலனில் இருந்து கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடந்து உருவான சுனாமிப் பேரலைகள் அங்கிருந்த புகுஷிமா அணுஉலையின் மூன்று கொள்கலன்களை முற்றிலும் பாதித்தது.

அப்போது வெளியேறத் தொடங்கிய கதிரியக்கக் கழிவுகள் கொள்கலன்களைக் குளிர்விக்க கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்புத் தொட்டியில் கலந்து வருகின்றன. இந்த நீர் வெளியேறும்போது சுற்றுப்புறத்தில் வாழும் மக்களும் பாதிப்படைவார்கள் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.
இந்த அணுஉலையைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் பெரும் முயற்சி செய்து வரும்போதும் இது தொடர்ந்து பல பிரச்சினைகளை அளித்து வருகின்றது. அந்த வரிசையில் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் பெருமளவில் வெளியேறியுள்ளதை புதன்கிழமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 100 டன் எடையுள்ள நீரானது சேமிப்புத் தொட்டிகளிலிருந்து கசிந்துள்ளதாக அணு உலையின் ஆபரேட்டர் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், கசிந்த இந்த அசுத்த நீரானது அருகில் உள்ள பசிபிக் கடலில் கலந்திருக்கும் என்பதை மறுத்துள்ள அதிகாரிகள் பூமியினால் இது உறிஞ்சப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஜப்பானிலும், பிற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்படுத்தியுள்ள கவலையை அறிந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசும் இந்த நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
கடந்த வருடமும் இதுபோல் ஏற்பட்ட பல கசிவுகளை நிறுத்த இந்த நிர்வாகம் போராடியுள்ளது. கடந்த கோடைக்காலத்தில் 300 டன் எடையுள்ள கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் கசிந்ததை அடுத்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சம்பவமே அங்கு நடந்துள்ள பெரிய நிகழ்வாகும்.












Click it and Unblock the Notifications