மெக்கா புனிதப் பயணக் குழுவில் 109 வயது இந்திய முதியவர்!
ஜெட்டா: மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றுள்ள இந்தியர்கள் குழுவில் 109 வயது முதியவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் புனித யாத்திரை செய்வதற்காக இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு புறப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பயணிகளும் சவுதி அரேபியா வந்தடைந்தனர்.
இந்தியாவில் இருந்து புறப்பட்ட முதல் குழு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதினா நகரை வந்தடைந்தது.
235 பேர் கொண்ட குழு:
அந்த குழுவில் மொத்தம் 235 பேர் இடம்பெற்றிருந்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம்வரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 யாத்திரீகர்கள் இந்தியாவில் இருந்து சவுதி வந்தடைந்துள்ளனர்.
இந்திய ஹஜ் கமிட்டி:
இவர்களில் ஒரு லட்சத்து 20 பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், மற்றவர்கள் தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் வந்துள்ளனர்.
109 வயது முதியவர்:
இந்த குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 109 வயது முதியவர் ஒருவரும், 100 வயது முதியவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
வயதான இரண்டு பேர்:
மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த இஞ்சில் ஹொஸைன் பிஸ்வாஸ், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துர் ரஹிம் மற்றும் ஃபிடா ஹுஸைன் ஆகியோர் இவ்வாண்டு ஹஜ் செய்யச் சென்ற இந்தியர்களில் மிகவும் வயதானவர்கள் என தெரியவந்துள்ளது.
20 லட்சம் பேர்:
இந்த ஆண்டு, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்வதற்காக சவுதியில் குவிந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.