பிரிட்டன் தேர்தலில் அமோகம்: 12 இந்திய வம்சாவளி எம்.பிக்கள் தேர்வு! தமிழ் பெண் 2வது முறையாக வெற்றி
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 12 இந்திய வம்சாவளி எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தங்கம் டெபனோர் இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த தேர்தலை விட ஆளும் கன்சர்வேட்டிவ் சற்று பின்னடைவே ஏற்பட்டது. 649 தொகுதிகளின் முடிவு அடிப்படையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியானது 316 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் 12 இடங்கள் குறைவாகும்.
எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சி 261 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. ஸ்காட்லாந்தில் இருந்து இயங்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அந்த கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும், லிபரல் டெமாக்ரட் கட்சி 12 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
தமிழ் வம்சாவளிப் பெண்
இதனிடையே, இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 12 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, லேபர் கட்சி சார்பில், பிரிஸ்டால் வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தங்கம் டெபோனர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர், தாய் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வெற்றி
புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கம் டெபோனர் 2015ம் ஆண்டும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மார்பக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று மீண்டும் அரசுப் பணிக்கு திரும்பியவர். இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தங்கம் டெபோனருக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
12 இந்திய வம்சாவளியினர்
இவர் உள்டபட லண்டன் நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 12 இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பிக்களாக உள்ளனர்.
பெருமை சேர்த்த சீக்கியர்கள்
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் சீக்கிய மதத்தை சேர்ந்த ப்ரீத் கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேஷி உள்பட 2 எம்பிக்கள் இந்த முறை புதிதாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ப்ரீத்தி தான் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் முதல் சீக்கியப் பெண்.
எண்ணிக்கை அதிகரிப்பு
சீக்கிய மதத்தில் சேர்ந்த 2 பேரின் வெற்றியின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில்ல் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.,க்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்திய வம்சாவளிச் சேர்ந்த தொழிலாளர் கட்சி
சார்பில் 7 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 5 பேரும் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.