இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்களை ரெடியாக வைத்துள்ளது பாக்.: அமெரிக்கா திடுக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால், அதை எதிர் கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்த சுமார் 130 அணு ஆயுத போர் தளவாடங்களை அந்த நாடு தயாராக வைத்து இருப்பதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சிஆர்எஸ் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவு குறித்து, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 110 முதல் 130 வரையிலான அணு ஆயுத போர் தளவாடங்கள் உள்ளதாக கணித்துள்ளோம்.
கூடுதல் குண்டுகள்
இவற்றுக்கும் மேலேயும் ஆயுதங்கள் இருக்கலாம். இத்துடன் தங்களது திட்டங்களுக்கு உதவும் வகையில் அணு பிளவுப் பொருட்களையும் பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் அணு ஆயுதப் பொருட்களை எதிரிகளுக்கு எதிராக நிறுத்த திட்டமிட்டுள்ளது.
மிரட்டுவதற்காக
பாகிஸ்தான் மீது இந்தியா எந்தவித ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவை மிரட்டுவதற்காக, இந்த அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. பாகிஸ்தான் அணு பிளவு ஆயுதங்களை தயாரித்து வருவதும், இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பலரும் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை
அதேநேரம், தங்களது அணு ஆயுதங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் சமீபத்தில் எடுத்துள்ளது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள், தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரித்தது, சர்வதேச அணு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் எடுக்கப்பட்டது என்று பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
தீவிரவாதிகள் கைக்கு சென்றால்
பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதால் ஆணு ஆயுத தளவாடங்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழவே செய்கின்றன. ஒருவேளை பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் கைக்கு சென்றால் அல்லது தளவாடங்கள் கைமாறினால் அல்லது தொழில்நுட்பம் கசிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் நீடிக்கவே செய்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.