தென் ஆப்பிரிக்க துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி.. இனவெறி காரணமா? போலீஸ் விசாரணை!
ஜொகன்னஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மதுபான விடுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக வெளிநாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது. அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும். இதனால் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 2021 ஆம் ஆண்டும் இதேபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கி கலாச்சாரம்
இதனைத்தொடர்ந்து கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயுதக் கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருந்தும் ஆயுதங்கள் பயன்பாடும் குறைந்தபாடில்லை. இதனிடையே டென்மார்க், இத்தாலி, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் ஏராளமானோர் ஏன் உயிரிழக்கிறோம் என்று தெரியாமலே உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இரவு நேரத்தில் அனுமதிபெற்று இயங்கி வந்த மதுபான விடுதியில் ஏராளமானோர் மது அருந்தி மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று, பேருந்தில் வந்து இறங்கியுள்ளது.

14 பேர் பலி
தொடர்ந்து மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது அந்த மர்ம கும்பல், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனவெறி காரணமா?
இதனைத்தொடர்ந்து அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற மதுபான விடுதிக்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். இதனால் இனவெறி பிரச்னை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications