'திடீர் வெடிச்சத்தம்..' பாகிஸ்தானில் அதிபயங்கர வெடிவிபத்து.. 15 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் ஏற்பட்ட அதிபயங்கர வெடி விபத்தில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட அதிபயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
கராச்சி நகரின் ஷேர்சா பகுதியில் ஏற்பட்ட இந்த மோசமான வெடி விபத்து காரணமாக, அங்கிருந்த வங்கிக் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கட்டிட இடுபாடிகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இது குறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், எரிவாயு பைப்லைன் வெடித்ததில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய இன்னும் சில நாட்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த எம்பி ஆலம்கிர் கானின் தந்தை திலாவர் கானும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் தொடர்பு சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications