சிட்னி முற்றுகை முடிந்தது: 2 இந்திய பிணையாளிகளும் பத்திரமாக மீட்பு- சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: சிட்னியில் தீவிரவாதியின் பிடியில் இருந்த 2 இந்திய பிணையக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் புகுந்த ஈரானைச் சேர்ந்த மான் ஹாரன் மோனிஸ்(50) 50 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடினர். 17 மணிநேரம் கழித்து ஆஸ்திரேலிய போலீசார் ஹோட்டலுக்குள் புகுந்து பிணையக் கைதிகளை காப்பாற்றினர்.

முன்னதாக போலீசாருக்கும், மோனிஸுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பிணையக் கைதிகள் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஹோட்டலில் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவன ஊழியர் விஸ்வகாந்த் அன்கிரெட்டி மற்றும் ஸ்ரீ புஷ்பேந்து கோஷ் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மோனிஸை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.
அவர் போரில் இறந்த ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்திற்கு துவேஷமாக கடிதம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications