சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் போட்டி!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 பேர் உட்பட 181 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி வரை உள்ளது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கெங் யாம் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வரும் 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 24 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான ஆளும் கட்சியின் 50 ஆண்டுகால செல்வாக்கு நீடிக்கிறதா? என்பது இத்தேர்தலில் தெரியவரும்.
இத்தேர்தலுக்கு 21 இந்திய வம்சாவளியினர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் சட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்குவர்.
தர்மன் சண்முகரத்தினம், அரசியல்வாதியாக மாறிய பொருளாதார நிபுணர் கென்னத் ஜெயரத்தினம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள்.