ஈராக்: மினி பஸ்சில் வெடிகுண்டு... 32 பேர் பலி 150 பேர் காயம்
பாக்தாத்: ஈராக் நாட்டில் மினி பஸ் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பி வந்து சோதனைச் சாவடி அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 150 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பொது இடங்களிலும், அரசாங்க அலுவலகங்களை குறி வைத்தும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் பாக்தாத்துக்கு 60 மைல்கள் தொலைவில் இருக்கும் ஹில்லா நகரில் மினி பஸ்சில் குண்டுகளை ஏற்றி வந்து தீவிரவாத தாக்குதல் நடந்தது.
இது வடக்கு நுழைவு வாயிலாக இருப்பதால் அங்குள்ள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனை நடத்த ஏராளமான வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.
அப்போது பார்க்கிங் பகுதியில் தயாராக நிறுத்தி வைத்திருந்த மினி பஸ்சில் இருந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
32 பலி 150 பேர் காயம்
இந்த குண்டு வெடிப்பில் 12-க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு நொறுங்கின. அதில் பெண், 12 வயது குழந்தை உள்பட 32 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 150 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குண்டு வெடித்ததும் கார்களில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்து பலர் உடல் கருகி இறந்தனர்' என்றார்.
யார் பொறுப்பு?
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் சமீபத்தில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய பெரிய தாக்குதல் இதுவாகும்.
8,868 பேர் மரணம்
ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி ஈராக் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்களில் கடந்த ஆண்டில் 8,868 பேர் பலியானார்கள்.
2 மாதத்தில் 1,400 பலி
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.