வேகமாக 'யூ டர்ன்'.. 500 அடி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்த பஸ்.. 40 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்!
அதிவேகமாக வந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் ஒன்று 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்த பயங்கர விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேகமாக வந்த பஸ், அதே வேகத்தில் யூ டர்ன் அடித்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

48 பயணிகளுடன் சென்ற பஸ்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சொகுசு பஸ் ஒன்று 48 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இதில் பலூசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியை பஸ் கடக்க வேண்டி இருந்தது. இந்த பாதை மிகக் குறுகலான சாலையை கொண்ட ஒரு மலைப்பாதை ஆகும். எனவே, 20 கி.மீ. வேகத்திற்கு மேலே இங்கு செல்லக்கூடாது என்பது விதி.

அதிவேகமாக 'யூ டர்ன்'
ஆனால், அந்த பஸ் ஓட்டுநரோ நெடுஞ்சாலையில் செல்வதை போல அதிவேகமாக அங்கு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பஸ் சென்றுள்ளது. இதனால் அப்போதே பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். இந்நிலையில், வந்த வேகத்தில் அப்படியே அந்த ஓட்டுநர் யூ டர்ன் அடித்துள்ளார். அப்போது, அங்கிருந்த பாலத்தின் சுவர் மீது மோதிய பஸ், அதை உடைத்துக் கொண்டு செங்குத்தாக 500 அடி மலைப் பள்ளத்தாக்கில் விழுந்தது.

தீப்பிடித்த பஸ்
பயங்கர சத்தத்துடன் விழுந்த அந்த பஸ்ஸில் இருந்து, பயணிகள் தத்தி தவழ்ந்து வெளியேறுவதற்குள்ளாக, துரதிருஷ்டவசமாக அதில் தீப்பிடித்தது. இதனால் ஏற்கனவே படுகாயமடைந்திருந்த பயணிகள் தீயில் சிக்கினர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தீ எரிந்ததால் அவர்களால் அருகே செல்ல முடியவில்லை.

40 பேர் பலி
இதையடுத்து, தீயணைப்புப் படையினர் அங்கு வந்து தீயை அணைத்து பயணிகளை மீட்டனர். எனினும், அதற்குள்ளாக 40 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பலத்த தீக்காயம் பட்டிருப்பதால் கவலைக்கிடமான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications