3 நைஜீரிய கிராமங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்- 48 பேர் பலி
மைதுகுரி: நைஜீரியாவில் 3 கிராமங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளனர்.
தென்னாப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பள்ளி மாணவிகள் சுமார் 200 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். மாணவிகளை மீட்கும் பணியை அண்டை நாடுகளின் உதவியோடு நைஜீரியா மேற்கொண்டு வருகிறது. பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று, நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜாஸ் நகரில் நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் சுமார் 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அவசர கால ஊழியர்கள் உட்பட சுமார் 118 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று அந்த மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் பாம் அபுயா தெரிவித்தார்.
ஜாஸ் நகர குண்டு வெடிப்பு பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே, மாணவிகள் கடத்தப்பட்ட சிபோக் நகருக்கு இடையேயுள்ள 3 கிராமங்களில் இன்று அதிகாலை போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் சுமார் 48 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.












Click it and Unblock the Notifications