வங்கதேச தேர்தலில் வன்முறை: தேர்தல் அலுவலர் உள்பட 12 பேர் படுகொலை
டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் வன்முறை வெடித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறைக்கு தேர்தல் அலுவலர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு ஏற்கனவே 153 எம்.பி.க்.கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 147 தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக வாக்கு சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்டனர். இந்த தேர்தலை வங்க தேசத்தின் முக்கிய எதிர்கட்சியான வங்கதேச தேசிய கட்சி புறக்கணித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் இல்லாத மற்றொரு நபரின் தலைமையிலான காபந்து அரசு தேர்தலை நடத்த வேண்டும் என வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் கலிதாஜியா வலியுறுத்தினார். அதை ஏற்க பிரதமர் ஷேக் ஹசீனா மறுத்துவிட்டார். இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தது.
அதனால் பெரும்பாலான இடங்களில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து இன்று பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி 2 நாள் முழு அடைப்புக்கு கலிதாஜியா அழைப்பு விடுத்துள்ளார். இதனால் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது.
வன்முறை சம்பவங்களில் நேற்று வரை 120 வாக்கு சாவடிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 140-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்று ஓட்டுப் பதிவையொட்டி நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத வன்முறையாளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு செல்ல விடாமல் வாக்காளர்களை தடுத்தனர். தகுர்டான் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் ஒருவரை வன்முறையாளர்கள் அடித்தே கொன்றனர். அவரை காப்பாற்ற சென்ற 5 போலீசாரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
ரங்பூர் பகுதியில் ஆளும் கட்சியினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 2 பேர் பலியாகினர். நில்பமரி பகுதியில் வாக்குச்சாவடி எரிக்கப்படுவதை தடுக்க முயன்ற ஒரு வாலிபரும் அடித்துக் கொல்லப்பட்டார். மொத்தத்தில் இன்று நிகழ்ந்த தேர்தல் வன்முறைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
சுமார் 4 1/2 லட்சம் மக்கள் வாக்களிக்க வேண்டிய இந்த தேர்தலின் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிற்பகல் 1 மணிவரை 136 வாக்குச்சாவடிகள் இன்று தீ வைத்து எரிக்கப்பட்டன. உள்ளே இருந்த வாக்காளர் பட்டியல்களையும், வாக்குச் சீட்டுகளையும் சில சமூக விரோதிகள் தீயிலிட்டு எரித்தனர். இதனால் இந்த வாக்குச் சவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 50 சதவீதம் வாக்குகள் கூட பதிவாகியிருக்காது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.