அரசு வக்கீலைக் கொன்ற வழக்கு... 8 தமிழர்கள் மலேசியாவில் கைது.. 6 பேர் மீது கொலை வழக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் துணை அரசு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 தமிழர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எட்டு பேரில் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த டாக்டர் ஆவார். மலேசியாவில் பரபரப்பான பல வழக்குகளை நடத்தி வந்தவர் கொலையான வழக்கறிஞர் அந்தோணி கெவின் மொராய்ஸ்.
செப்டம்பர் 4ம் தேதி மொராய்ஸ் மாயமானார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், புத்ரஜெயா அருகே ஒரு இடத்தில் மொராய்ஸின் உடல் சிக்கியது. ஒரு பெரிய எண்ணெய் டிரம்மில் அவரது உடல் போட்டு வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் ஒருவர் பின் ஒருவராக 8 பேரும் சிக்கினர். இந்த வழக்கி் டாக்டர் குணசேகரன் (ராணுவ டாக்டர்), ஜி. குணேசேகரன், தினேஷ்வரன், தினேஷ் குமார், விஸ்வநாத், நிர்மலன், ரவிச் சந்திரன், முருகன் அருஜலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் குணேசகரன், துவாங்கு ராணுவ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் மீது ஏற்கனவே 2013ம் ஆண்டே ஒரு வழக்குப் போடப்பட்டது. அதிலிருந்து அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
செப்டம்பர் 4ம் தேதி மொராய்ஸை கடத்திச் சென்று இந்தக் கும்பல் கொலை செய்து உடலை டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதில் 6 பேர் மீது கொலை வழக்கும், மெக்கானிக் முருகன் அருஜலன் உள்பட 2 பேர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 30ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.