பாக்தாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து.. 82 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் பலியாகிவிட்டனர். 110 பேர் காயமடைந்தனர்.
தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும் இப்னு அல் கதீப் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் தீவிபத்து ஏற்பட்டது.
அந்த மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள் இல்லாததால் தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. மருத்துவமனை உள்ள வார்டு ஒன்றில் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதித்தவர்கள் என்பதால் தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் பலரால் தப்பிக்க முடியவில்லை. வென்டிலேட்டரை அகற்றியதாலும் சிலர் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மற்ற நோயாளிகள் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். இந்த தீவிபத்து குறித்து ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.