சித்திரச் "செவ்வாயில்" உயிர் இருக்கலாமாம்..நாசா தரும் "ஹேப்பி நியூஸ்"!
சான் பிரான்சிஸ்கோ: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க அல்லது வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக நாசா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. அவை நுண்ணுயிரிகளாகக் கூட இருக்கலாம் என கூறுகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
சர்வதேச அளவில் செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட ஆய்வு, பின்னர் அங்கு நம்மைப் போலவே மனிதர்கள் இருக்கிறார்களா என மாறியது. இப்போது இந்த ஆய்வில் மேலும் வேகம் பிடித்துள்ளது. ஆய்வுக் களமும் பல்வேறு பிரிவுகளாக விரிந்து கொண்டே இருக்கிறது.
அங்கு தண்ணீர் இருக்கிறதா, உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா, வாழ முடியுமா என்பது உள்பட பல்வேறு விதமான ஆய்வுகள் பல கோணங்களில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்று நாசா விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த கண்டுபிடிப்பு கூறுகிறது.
நாசா அனுப்பி வைத்துள்ள கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியுள்ள ஒரு தகவல்தான் நாசாவை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு கியூரியாசிட்டி அனுப்பிய தகவலின்படி அங்கு மீத்தேன் வாயு இல்லை என்று அனுமானித்தனர் நாசா விஞ்ஞானிகள். ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆய்வு முடிவின்படி அங்கு மீத்தேன் வாயு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இப்போதும் கூட அங்கு மீத்தேன் இருக்கலாம் என்ற முடிவுக்கும் நாசா வந்துள்ளது.
மீத்தேன்...
இது மிக முக்கியமான அம்சமாகும். காரணம், மீத்தேன் இருக்கிறது என்றால் நிச்சயம் அங்கு உயிரினங்கள் இருக்க வேண்டும் அல்லது இருந்திருக்க வேண்டும்.
நம்பிக்கை...
அதுவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உருவான மீத்தேன் படலத்தை கியூரியாசிட்டி தகவலாக அனுப்பி வைத்துள்ளதாம். எனவே இப்போதும் கூட செவ்வாய் கிரகத்தில் ஏதோ ஒரு வகையில் உயிரினம் இருக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
2 காரணங்கள்...
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீத்தேன் படலத்திற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதாவது சில நுண்ணுயிரிகள் வெளியேற்றிய கழிவுப் பொருள் மூலம் இந்த மீத்தேன் படலம் இருந்திருக்கலாம் என்பது அதில் ஒன்று.
மிகப் பெரிய முன்னேற்றம்...
இதுகுறித்து கியூரியாசிட்டி திட்ட விஞ்ஞானி ஜான் குரோட்ஸிங்கர் கூறுகையில் நமது ஆய்வுகளில் கிடைத்துள்ள மிக முக்கியமான, மிகப் பெரிய முன்னேற்றமாக இதை நிச்சயம் சொல்ல முடியும் என்றார்.
ஆர்கானிக் மூலக்கூறு...
இதுதவிர செவ்வாய் கிரக பாறை ஒன்றின் மாதிரியில், கார்பன் அடிப்படையிலான ஆர்கானிக் மூலக்கூறு இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதை வைத்து உடனடியாக அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் அல்லது தற்போது இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது என்றாலும் கூட, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக் கூடிய வகையிலான ஏதோ ஒரு அடிப்படை இருக்க வாய்ப்புள்ளது என்று நி்ச்சயம் நம்பலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
உயிர் வாழத் தேவையானவை...
உயிர் வாழத் தேவையான சில அடிப்படை விஷயங்கள் அங்கு தற்போதும் கூட இருக்கலாம் என்றும் நாசா கருத ஆரம்பித்துள்ளதாம். இந்த கண்டுபிடிப்புகளில் மீத்தேன் இருப்புதான் மிக முக்கியமானது.
மீத்தேன் படலம்...
மீத்தேன் வாயுவானது நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்காது. சூரிய ஒளி பட்டு, வேதி வினை மூலமாக அது பல்வேறு மூலக்கூறுகளாக பிரிந்து கரைந்து போய் விடும். எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீத்தேன் படலத்தின் மூலம், மிக சமீபத்தில்தான் அது உருவாகியிருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. எனவே ஏதோ ஒரு வகை உயிரினம் தற்போது செவ்வாயில் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு நாசா வந்துள்ளது.
நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம்...
மீத்தேன் வாயு உருவானதற்கு மனிதன்தான் காரணம் என்றும் கூற முடியாது. அதேசமயம், அங்கு நுண்ணுயிரிகளால் இது ஏற்பட்டிருக்கலாம். மீத்தனோஜென் என்ற நுண்ணுயிரி மீத்தேனை கழிவுப் பொருளாக வெளிப்படுத்தக் கூடியதாகும். அது இருக்கலாம்.
திட்டவட்டம்...
எப்படி வந்திருந்தாலும் சரி மீத்தேன் இருக்கிறது என்றாலே அங்கு உயிர் வாழத் தேவையான ஒரு தகுதி இருக்கிறது என்றுதான் பொருள் என்பதால் செவ்வாயில் உயிரினம் வாழத் தகுதியான அடிப்படை விஷயங்கள் இப்போதும் இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாக கருதுகிறார்கள்.
மிகப் பெரிய முன்னேற்றம்...
கடந்த ஆண்டு மீத்தேன் சுத்தமாக இல்லை என்று நாசா கூறியிருந்தது. ஆனால் இப்போது அதிலிருந்து பல மடங்கு இறங்கி வந்து மீத்தேன் உள்ளது என்று கூறியுள்ளது மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.