அட கடவுளே.. உடல் வலிமைக்காக அணில் கிட்னியை பச்சையாக சாப்பிட்ட தம்பதி.. பிளேக் நோய் தாக்கி பலி
யுல்லான்பட்டர்: மங்கோலியாவில் உடல் வலிமைக்காக அணில் கிட்னியை பச்சையாக சாப்பிட்ட தம்பதி பிளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதே விருப்பம். இதற்காக பலரும் உடற்பயிற்சி, உணவு முறை என பல வழிகளை பின்பற்றி வருகிறோம்.
ஆனால் மங்கோலியா நாட்டு மக்களோ அணில் கறியை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமையாக இருக்கும் என நம்பி வருகின்றனர். அதனடிப்படையில் பலரும் அணில் கறியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

பச்சையாக அணில்கறி
அப்படி மங்கோலியா நாட்டில் உடல் வலிமைக்காக அணில் கறியை பச்சையாக சாப்பிட்ட ஒரு தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது.

கிட்னி, பித்தப்பை
இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை பெரிய அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை அப்படியே பச்சையாக உண்டனர்.

உடல்சோர்வு
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த தம்பதியர் மருத்துவமனைக்கு சென்றனர்.

கணவர் பலி
அப்போது இருவருக்கும் பிளேக் நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் கணவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

9 மாத குழந்தை
அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 14 வயது முதல் 9 மாதம் வரை 4 குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு
ஆனால் அந்த தம்பதிக்கு பிறகு யாரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் வேறு யாரேனும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என உலக சுகாதார மையம் கண்காணித்து வருகிறது.

700 ஆண்டுகளுக்கு முன்பு
700 ஆண்டுகளுக்கு முன்பு 1800களில் ஐரோப்பிய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டை விழுங்கியது இந்த பிளேக் நோய். கொறித்துண்ணிகள் மூலம் பரவிய இந்த பிளேக் நோய் சீனா, ஹாங்காங் மற்றும் அதன் அருகில் இருந்த துறைமுக நகரங்களில் லட்சக்கணக்கானோரை பலிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications