ஜப்பான் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்.. வீதிக்கு வந்த மக்கள்!
டோக்கியோ: ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்திய நேரப்படி இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஆசிய நாடான ஜப்பான் ''ரிங் ஆஃப் ஃபயர்'' எனப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.
அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொண்டு அங்குள்ள மக்கள் பழகி விட்டனர்.ஜப்பானில் உள்ள கட்டிடங்கள் வலுவான நடுக்கத்தைத் தாங்குவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கட்டுமான விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

சக்தி வாய்ந்த நில நடுக்கம்
இவாத் மாகாணத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கதத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜப்பான் தலைநகரான டோக்கியோ இந்திய நேரப்படி இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

6.1 புள்ளிகளாக பதிவானது
டோக்கியோவின் கிழக்கே சிபா மாகாணத்தில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதால் டோக்கியாவில் இயங்கி கொண்டிருந்த புல்லட் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சுனாமி எச்சரிக்கை அபாயம் ஏதும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கியோவில் சமீபத்திய நிலநடுக்கங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நிலநடுக்கம் வலுவானது என்றும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பல இடங்களில் உணரப்பட்டது என்று அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய பிரதமர் வேண்டுகோள்
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் டுவிட்டரில் பதிவிட்ட ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ''தயவுசெய்து சமீபத்திய தகவல்களைச் சரிபார்க்கும் போது உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குடியிருப்பாளர்களை வற்புத்தினார். ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்றாலும், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட மிக பயங்ககரமான நிலநடுக்கத்தை ஜப்பான் மக்கள் மறந்து விட மாட்டார்கள். கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கதால் நகரங்களை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 18,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications