கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் உக்கிர மோதல்!
டொனெட்ஸ்க்: கிழக்கு உக்ரைன் நகரங்களை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கோரி ரஷ்யா ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது அது கிழக்கு உக்ரைனில் உள்நாட்டு போராக மாறியுள்ளது.
ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன. அவற்றை மீட்க ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

டொனெட்ஸ்க் நகரில் நேற்று ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்றது. திடீரென வெடித்த இந்த யுத்தத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பீதியுடன் வெளியேறினர்.
இந்தநிலையில் நிவாரண உதவிகளை 100 வாகனங்களில் ரஷ்யா அனுப்புவதற்கு உக்ரைன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவோ 1000க்கும் மேற்பட்ட வாகனங்களை உக்ரைனுக்குள் அனுப்பி வைத்திருப்பதால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இது உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இதனால் ஒப்புக் கொண்டபடி குறைவான வாகனங்களைத்தான் அனுமதிக்க முடியும் என்று உக்ரைன் கூறி வருகிறது. இதனால் உக்ரைன் -ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications