ஆப்கனை விட்டு வெளியேற குவிந்த மக்கள்.. திடீரென மூடப்பட்டது வான் வழித்தடம்.. தவிக்கும் இந்தியர்கள்
காபூல்: காபூல் விமான நிலையம் மூலமாக வேறு நாடுகளுக்கு செல்ல ஆப்கானியர்கள் குவிந்ததால், அமெரிக்க படை வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மேலும், ஆப்கனில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வர முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
ஆப்கனை படிப்படியாக தாலிபான்கள் கட்டுப்படுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் காபூலையும் வீழ்த்தினர். எனவே, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் முடிவடைந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அகதிகளாக கிளம்புகிறார்கள்
ஆப்கன் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வீழ்ந்ததால், பல மக்களும் அகதிகளாக வேறு நாடுகளை நோக்கி புலம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
விமானங்களை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஒரே நேரத்தில் காபூல் ஏர்போர்ட்டில் குவிந்ததால், அங்கேயுள்ள அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டன. இதனால் பயணிகள் மிரண்டு போயினர்.

அமெரிக்க படைகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் குடிமக்கள் மற்றும் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக காபூல் விமான நிலையத்தில் 6,000 பாதுகாப்பு படையினரை அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது.

காபூல் விமான நிலையம்
இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது விமானத்தை காபூலிலிருந்து காலை கிளம்புவதற்கு பதில் பிற்பகல் கிளம்பும் வகையில் கால நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இரு விமான ஊழியர்களுடன் இரண்டு விமானங்கள் வெளியேற்றப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளன. காபூலில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு, காலை 8:30க்கு பதில் 12:30 க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். ஆனால், ஆப்கன் வான் வழித்தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், ஏர் இந்தியா விமானம் இந்தியாவிற்கு கிளம்ப முடியவில்லை.

வான் வழித்தடம்
இதனிடையே, ஆப்கான் வான் பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏர் இந்தியாவின் சிகாகோ-டெல்லி விமானம் ஆப்கானிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாதபடி திசை திருப்பப்பட்டுள்ளது. திருப்பிவிடப்பட்ட விமானங்கள் தோஹா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பி பின்னர் டெல்லிக்கு வரும்.

சுற்றி செல்லும் விமானங்கள்
மேற்கு மற்றும் கிழக்கு நாடுகள் ஆப்கன் வான் எல்லையை பயன்படுத்த முடியாததால், சுற்றி செல்ல தேவையுள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாகும்.












Click it and Unblock the Notifications