சார்லி ஹெப்டோவிற்கு எதிராக கராச்சியில் போராட்டம்: பிரான்ஸ் பத்திரிகை போட்டோகிராபர் சுடப்பட்டார்
கராச்சி: கராச்சியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் பிரான்ஸ் செய்தி நிறுவன போட்டோகிராபர் சுடப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையின் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து பிரான்ஸில் தொடர்ந்து 3 நாட்கள் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்தன. இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிரான்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளான சார்லி ஹெப்டோ இதழ் மீண்டும் வெளியானது.
முகப்பு அட்டையில் முகம்மது நபியின் சித்திரத்தை தாங்கி வந்துள்ள இப்பத்திரிகை பிரான்ஸ் வார இதழான சார்லி ஹெப்டோவின் அட்டை படத்தில் மீண்டும் முகமது நபிகள் கருத்துச் சித்திரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், தீவிரவாத தாக்குதலுக்கு பின்னரான சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்புக்கு பிரான்ஸில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை வெளியான பதிப்புகள் அனைத்தும் விடியலுக்கு முன்னரே விற்று தீர்ந்தன. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் பத்திரிகையை வாங்க வந்த மக்களுக்கு பிரதிகள் கிடைக்கவில்லை.
பிரதிகள் கிடைக்காததால் சார்லி ஹெப்டோ பத்திரிகையை வாங்க பிரான்ஸ் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. காத்திருந்த மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடனே திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தை சித்தரித்து வந்திருக்கும் இந்த பதிப்புக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு, வழக்கமாக வரும் 30 லட்சம் பதிப்புகளை விட 50 மடங்கு அதிக பதிப்புகள் தயாரிக்கப்பட்டது அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்களும் எழுந்தன.
பாகிஸ்தானில் போராட்டம்
இதனிடையே சார்லி ஹெப்டோ இதழுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் வெடித்தது. தெற்கு கராச்சியில் பிரான்ஸ் தூதரகத்தை 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். தூதரக பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.
அப்போது மோதல் ஏற்பட்டது. இதில் கலவரக்காரர்களும் போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த பிரான்ஸ் செய்தி நிறுவன போட்டோகிராபர் மீது குண்டு பாய்ந்தது இதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.