2013க்கு பிறகு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் வரை பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்
பெங்ஜிங்: சீனாவில் சிச்சுவான் நகரத்தில் 6.8 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2013க்கு பிறகு உணரப்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கம் நண்பகல் 12.52 மணியளவில் உணரப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் லுடிங் நகரின் 16 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் கடந்த 2013ல் இம்மாதிரியான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், செங்டுவில் இருந்து தென்மேற்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள யான் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கமாக உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மாலை நான்கு மணி நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 13 ஆக ஆதிகரித்துள்ளதாக CGTN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 140 அவசரக்கால மருத்துவ மீட்புக் குழு உறுப்பினர்கள் முதற்கட்டமாக பணியை தொடங்கினர். பின்னர் அதிக அளவில் மீட்பு குழுவினர் பணியில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் 2013ல், யான் பகுதியில் பதிவான 7 அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 100 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். அதற்கு முன், மே 2008ல் வென்சுவானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 70,000 பேர் வரை உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது நாட்கணக்கில் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications