ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபரப்பு:ஏர் பிரான்ஸ் விமானத்திற்கு டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல்!
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து பாரீஸ் நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. திடீரென அந்த விமானத்திற்கு டுவிட்டர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறுகையில், நாங்கள் மிரட்டலை எப்போதும் முக்கியத்துவமானதாக கருதுகிறோம். விமானத்தில் தேடுதல் பணியை மேற்கொள்வதற்காக உடனடியாக வெளியேற்றினோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் மிரட்டல் வந்த டுவிட்டர் அக்கவுண்ட்டில் இறந்த தீவிரவாதி ஜிகாதி ஜான் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
முன்னதாக, பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தொடர் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, நெதர்லாந்து, பிரான்ஸ் நாட்டு எல்லைகள், விமான நிலையம். ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.