என் இதயத்தில் ரத்தம் கசிகிறது: ஏர்ஏசியா சிஇஓ டோனி பெர்னாண்டஸ் வேதனை
ஜகர்தா: ஏர் ஏசியா நிறுவன சிஇஓ டோனி பெர்னாண்டஸ் ட்விட்டர் மூலம் மாயமான விமானம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
ஏர் ஏசியா நிறுவன விமானம் க்யூஇசட்8501 162 பேருடன் இந்தோனேசியாவில் உள்ள சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய 40 நிமிடங்களில் மாயமானாது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று இன்று அறிவிக்கப்பட்டு தேடல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனத்தின் சிஇஓவான டோனி பெர்னாண்டஸ் விமானம் பற்றி ட்விட்டரில் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருவதுடன், பயணிகளின் உறவினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டோனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது என் வாழ்வில் மிகவும் மோசமான கொடுங்கனவு ஆகும். உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி. நாம் அனைவரும் துணிச்சலுடன் இருக்க வேண்டிய நேரம். பயணிகள் மற்றும் சிப்பந்திகளை பற்றியே என் எண்ணம் உள்ளது.
#QZ8510: Latest statement from @AirAsiaId http://t.co/UX2TlzbGbR pic.twitter.com/jbcIsaJMtM
— BBC Breaking News (@BBCBreaking) December 29, 2014
பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் உறவினர்களை நினைத்தால் என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. தேடல் மற்றும் மீட்புக் குழுவுடன் தொடர்பு கொள்ள இன்று ஜகார்தா வந்துள்ளேன். பயணிகளின் குடும்பத்தாரை சந்திக்க மீண்டும் சுரபயா செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய-போர்சுக்கீசியரான டோனிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2001ம் ஆண்டு கடனில் இருந்த வெறும் 2 விமானங்களை கொண்ட ஏர் ஏசியா நிறுவனத்தை வாங்கி அதை வெற்றிகரமானதாக ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.