"நான் திரும்ப வருவேன்.. முகமது யூனுஸ் அனைத்திற்கும் பதில் சொல்லணும்!" திடீரென ஆவேசமான ஷேக் ஹசீனா
டெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது அவாமி லீக் தொண்டர்களிடையே ஆன்லைன் வாயிலாக உரையாடினார். அப்போது அவர் சொன்ன பல கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காகவே அல்லா தன்னை உயிருடன் வைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒரு நாள் வரும்.. அப்போது அவாமி லீக் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர் பதில் சொல்லியே தீர வேண்டும் என குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இருப்பினும், கடந்தாண்டு அவருக்கு எதிராக நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அவருக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கிளர்ச்சியும் செய்தனர். இதனால் வேற வழியில்லாமல் அழர் வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

ஹசீனா
இதற்கிடடையே ஹசீனா இப்போது தனது தொண்டர்களுடன் ஆன்லைன் வாயிலாக உரையாற்றினார். வங்கதேசத்தை இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. முகமது யூனுஸை கடுமையாக விமர்சித்த ஹேசினா, மக்களை ஒருபோதும் நேசிக்காத நபர் என்று அவரை சாடினார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர் (யூனுஸ்) நாடு முழுக்க மக்களுக்கு அதிக வட்டியில் சிறிய தொகையை கடனாக கொடுத்தார். அந்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ்ந்தார். அப்போது அவரது போலித்தனத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு நாங்கள் நிறைய உதவினோம். ஆனால் மக்கள் பயனடையவில்லை. அவர் தனது நலனில் மட்டும் கவனம் செலுத்தினார். பின்னர் அவருக்கு அதிகாரத்தின் மீது ஆசை வந்தது. அதுவே இப்போது வங்கதேசத்தை மெல்ல எரித்து வருகிறது.
பயங்கரவாத நாடாக மாறிவிட்டது
வங்கதேசம் இத்தனை காலம் உலகிற்கு வளர்ச்சியின் முன்மாதிரியாக இருந்தது. ஆனால், இப்போது அது பயங்கரவாத நாடாக மாறிவிட்டது. எங்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். அவாமி லீக் தொண்டர்கள் மட்டுமின்றி, போலீசார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.
வங்கதேசத்தில் உள்ள ஊடகங்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறார்கள். நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் என எது குறித்தும் செய்தி வெளியிட முடியாத நிலையே இருக்கிறது. ஒருவேளை எதாவது செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டால் மறுநாளே அதையும் குறிவைத்து தாக்க தொடங்கிவிடுவார்கள்" என்றார்.
கலங்கிய ஹசீனா
1975ல் தனது தந்தையும் முதல் வங்கதேச அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட தனது குடும்பத்தினர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், "நான் என் தந்தை, தாய், சகோதரர், அனைவரையும் ஒரே நாளில் இழந்தேன். அப்போது என்னை சொந்த நாட்டிற்கே கூட திரும்ப அனுமதிக்கவில்லை. எனவே, சொந்தத்தை இழப்பதன் வலி எனக்குத் தெரியும். அல்லா என்னைப் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறார். ஒருவேளை அவர் என் மூலம் சில நன்மைகளைச் செய்ய விரும்புகிறார் போல.. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதை நான் உறுதியாக சொல்கிறேன்" என்றார்.
பதில் சொல்லியே தீர வேண்டும்
அப்போது ஹசீனா வங்கதேசத்தில் கொல்லப்பட்ட அவாமி லீக் தொண்டர்களின் குடும்பத்தினர் உடனும் கலந்துரையாடினார். தங்கள் குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல் குறித்து அவர்கள் விவரித்தனர். அதை கேட்ட ஷேக் ஹசீனா, "இவர்கள் மனிதர்களே இல்லை.. ஆனால், அவர்கள் நிச்சயம் சட்டத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
அல்லா இதையெல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார். எனது பெற்றோர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டது. அதேபோல இந்த அட்டூழியங்களுக்கு எதிராகவும் நீதி நிலைநாட்டப்படும். ஒரு நாள் வரும். அப்போது அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார்.
நிச்சயம் வருவேன்
அப்போது அவாமி லீக் தொண்டர் ஒருவர் ஷேக் ஹசீனாவிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, "நான் உயிருடன் இருக்கிறேன் " என்று மட்டும் பதிலளித்தார். மற்றொரு தொண்டர், "நீங்கள் நாடு திரும்ப வேண்டும்.. அல்லா உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்" என்றார். அதற்கு ஹசீனா, "அதற்கு தான் அல்லா என்னை உயிருடன் வைத்திருக்கிறார். நான் நிச்சயம் வருகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications