பாஜக வெல்ல வாய்ப்பு: மோடி மீதான அமெரிக்க அரசின் நிலை மாறுகிறது!
வாஷிங்டன்: இந்தியாவில் புதிதாக அமைய உள்ள அரசுடன் நெருக்கமான உறவு அமையும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின், நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:
தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்திக்காண்பித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை நடத்தி உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது இந்தியா.
இந்தியர்களையும், அமெரிக்கர்களையும், பாதுகாப்பாகவும், வளமாகவும் வைத்திருக்க உதவும் வகையில், வருங்காலத்திலும் இந்தியாவுடன் நெருக்கமான நட்பையும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பையும் தொடர அமெரிக்கா விரும்புகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்து புதிய அரசு அமைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்.
இந்தியாவில் புதிதாக அமைய உள்ள அரசுடன் நெருக்கமான உறவு அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த நரேந்திரமோடி உயிர் பலிகளை தடுக்கவில்லை என்று கூறி, அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு முதல், மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது. எக்சிட் போல் கணிப்புபடி மோடி பிரதமராக வந்தால், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.