"ரொம்ப தப்பு.. சகித்துக்கொள்ள மாட்டோம்!" நேட்டோ பக்கம் சாயும் ஐரோப்பிய நாடுகள்.. ரஷ்யா கொந்தளிப்பு
மாஸ்கோ: உக்ரைன் போர் இரு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இப்போது இந்த போரே ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்கியது.
இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்கள் மட்டுமே தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. மற்றபடி உக்ரைன் ரஷ்யா இடையே தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.
பாய்ந்து வந்த ஏவுகணைகள்! நொடியில் தரைமட்டமான பள்ளிகள்! பிஞ்சுகளை கொல்கிறதா ரஷ்யா? பரபரப்பு புகார்!
உக்ரைன் போர்
இரு மாதங்களைக் கடந்தும் இந்தப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் முதலில் தொடங்கிய சமயத்தில் யாருமே போர் இவ்வளவு நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். சில நாட்களில் உக்ரைன் சரணடைந்துவிடும் என்றே கருதி இருப்பார்கள். இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரியளவில் உதவி வருவதால், உக்ரைன் வீரர்களால் துணிச்சலாகப் போராட முடிகிறது.
நேட்டோ
இந்தப் போர் தொடங்கிய சமயத்திலேயே, ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக புதின் குறிப்பிட்டு இருப்பார். அதாவது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பியது. அப்படி நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதியே புதின் இந்த போருக்கு உத்தரவிட்டார்.
ஃபின்லாந்து மற்றும் சுவீடன்
ஆனால், புதினுக்கு இப்போது இது ஃபேக் பையர் ஆகி உள்ளது. உக்ரைன் போல தங்கள் நாடுகள் மீதும் கூட புதின் எப்போது வேண்டுமானாலும் போரை ஆரம்பிக்கலாம் என்று நடுநிலை நாடுகள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இதனால், தங்கள் நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் அவை இறங்கிவிட்டன. அதன்படி பல ஆண்டுகளாக நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருந்த ஃபின்லாந்து மற்றும் சுவீடன் இப்போது நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளன.
ரஷ்யாவுக்கு பின்னடைவு
இது ரஷ்யாவுக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பின்லாந்தும் ரஷ்யாவும் சுமார் 1300 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தால், பின்லாந்து நாட்டில் நேட்டோ படைகளால் ராணுவத்தைக் குவிக்க முடியும். உக்ரைனில் எது நடக்கக் கூடாது என்று ரஷ்யா விரும்பியதோ அது இப்போது மற்ற நாடுகளில் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு
இதனிடையே ரஷ்யா இதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இது குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், "இது மற்றொரு பெரிய தவறு. இது பொது வெளியில் தேவையின்றி ராணுவ பதட்டங்கள் அதிகரிக்கும். தற்போதைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முடிவெடுக்கும்போது, சில அபத்தமான கருத்துக்களுக்கு இடம் அளிப்பது வருத்தமளிக்கிறது.
பதிலடி நிச்சயம்
நேட்டோவில் இணையும் நடவடிக்கையால் இரு நாடுகளின் பாதுகாப்பு பலப்படும் என்று நினைத்தால், கண்டிப்பாக அது நடக்காது. இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுப்போம். இதை எல்லாம் சகித்துக்கொள்வோம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின்
நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஃபின்லாந்தின் அதிபர் சௌலி நினிஸ்டோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் சனிக்கிழமை பேசினார். அப்போது பின்லாந்தின் ராணுவ நடுநிலைமையைக் கைவிடுவது மிகப் பெரிய தவறாகவே இருக்கும் என்று புதின் தெரிவித்தார். இதையும் மீறித் தான் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் நேட்டோவில் இணைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.