மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது லேசுபட்ட காரியமில்லை.. ஆன்டிகுவா எதிர்க்கட்சி வைத்த செக்!
ஆன்டிகுவா :இந்தியாவில் இருந்து தப்பி வந்த வங்கி கடன் மோசடியாளரான மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் குடிமகனாகக் கருத வேண்டும் என்று ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) ஆன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவின் அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் வாங்கிவிட்டு ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பியோடிவர் தான் மெஹுல் சோக்ஸி. இவர் இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர். கீதாஞ்சலி என்ற நகைக்கடை நிறுவனத்தை நடத்திவந்தவர்.
இவர் ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பியோடிய பின்னர் தான், 13,578 கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வாங்கியில் அவர் மோசடி செய்த விஷயமே வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தத. இவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
ஆன்டிகுவா பிரதமர் யோசனை
இந்நிலையில் தான் குடியுரிமை பெற்றிருந்த ஆன்டிகாவில் இருந்து அண்டை நாடான டொமினிகாவுக்கு மெஹுல் சோக்ஸி சென்றுள்ளார். அங்கு அவரை அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து வைத்துள்ளனர். பிடிபட்டார். இதை அறிந்த ஆன்டிகாவின் பிரதமர், மெஹூலை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொமினிகாவுக்கு யோசனை கூறியுள்ளார்.
நம்ம சிட்டிசன்
இதற்குத்தான் ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்டை நாட்டிற்கு சென்ற மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் நாட்டின் குடிமகனாகக் கருத வேண்டும் என்று அன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது.
சோக்ஸி ஆன்டிகுவான் குடிமகன் என்பதால் அவருக்கு உரிய நலன்களை பெற உரிமை உண்டு, சட்டத்தின் படி நடத்தப்பட வேண்டும் என்று யுபிபி கூறியுள்ளது.
பிரதமர் யோசனைக்கு எதிர்ப்பு
சோக்சியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவது ஏற்கனவே நாட்டின் மீதான தவறான பிம்பத்தை ஏற்படுததி வருகிறது. இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு நேரடியாக அனுப்ப பிரதமர் யோசனை தெரிவிப்பது, சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்து, சிதைப்பதற்கான முயற்சியாகவே பார்க்க தோன்றுகிறது என்று யுபிபி கட்சியின் செய்தி நிறுவனமான ஆன்டிகுவா நியூஸ் ரூம் கூறியுள்ளது.
எப்போது வருவார்
டொமினிகன் போலீசாரால் கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸியிடம் அனைத்து உண்மையையும் கண்டறிந்த பின்னரே அந்நாட்டு அதிகாரிகள் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்றும் டொமின்கன் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆன்டிகுவான் ஊடகங்களின் தகவல்களின்படி, சோக்சி டொமினிகாவுக்கு படகு மூலம் பயணம் செய்தார். இரு தீவுகளுக்கும் இடையிலான தூரம் 100 கடல் மைல்கள் மட்டுமே இருந்தது. தன்னை வலுக்கட்டாயமாக டொமினிகாவுக்கு கடத்தி சென்றதாக மெஹுல் சோக்ஸி கூறியுள்ளார். ஆனால் ஆன்டிகுவான் போலீசார் மறுத்துள்ளனர்.