தங்கச் சுரங்கத்தில் தீ விபத்து: 2 கிமீ ஆழத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலி - ஒருவர் மாயம்
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் அருகில் உள்ளது ஹார்மோனி தங்க சுரங்கம். இன்று அந்த சுரங்கத்தில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள பகுதியில் சுமார் 17 தொழிலாளர்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு எதிர்பராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.
தொழிலாளர்கள் சுதாரித்து சுரங்கத்தை விட்டு வெளியேறுவதற்குள் தீ மளமளவெனப் பரவியது. தீ விபத்தோடு சுரங்கத்தில் இடிபாடும் உண்டானதால், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவலறிந்து விரைந்து செயல்பட்ட மீட்புப் படையினர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த 8 தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான 8 பேரின் சடலம் மீட்கப் பட்டது. மேலும், மாயமான ஒரு தொழிலாளியை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.
சுரங்கத்தின் உள் பகுதியில் புகை மண்டலமாக இருப்பதால் மீட்பு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எட்டுப் பேரை பலிவாங்கிய இந்த தீவிபத்து தான் தென்னாப்பிரிக்க சுரக்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்து என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.