அகதிகளுக்கான ஆஸ்திரேலியாவின் மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடல்
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு வரும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் ஒன்று மனுஸ்தீவு தடுப்பு முகாம். பப்புவா நியூகினி தீவுகளில் உள்ளது இந்த மனுஸ்தீவு முகாம்.
இந்த முகாமை மூடுவது தொடர்பாக ஆஸ்திரேலியா அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் பப்புவா நியூகினியின் அமைச்சர் பீட்டர் ஓ நீல்-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என்றும் அதேநேரத்தில் இந்த முகாமில் இருக்கும் யாரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மனுஸ்தீவு முகாமில் தற்போது 854 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
இதனிடையே இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த 6 பேர் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக அடைக்கலம் கோரியிருந்தனர். ஆனால் அந்த படகு மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகாலமாக ஆஸ்திரேலியாவுக்குள் வர முயன்ற அகதிகள் படகு எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.