பல்லாயிரம் அடி உயரத்தில் டைவ் அடித்தபோது ”சொய்ங்”னு மயங்கிய வீரர்... காப்பாற்றிய பயிற்சியாளர்!
பெர்த்: ஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து டைவ் அடிக்கும்போது சுய நினைவை இழந்த வாலிபர் பயிற்சியாளரால் சாதுர்யமாக காப்பாற்றப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிரிஸ்டோபர் ஜோன்ஸ் என்ற வாலிபர் ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து பயிற்சிக்காக டைவ் செய்தார். இதில் எதிர்பாராத விதமாக அவர் சுய நினைவிழந்தார்.
ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட ஜோன்சின் பயிற்சியாளர் மெக் பர்லேன், மயக்கமுற்றிருந்த ஜோன்சிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார்.
எனினும், ஜோன்சிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து எந்த வித தாமதமும் இல்லாமல் ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்தார் பர்லேன். நினைவிழந்த நிலையில் பறந்து கொண்டிருந்த ஜோன்சுக்கு 3000 அடி உயரத்தில் மீண்டும் நினைவு திரும்பியது.
அதன் பின்னர் ரேடியாவில் தனக்கு கிடைத்த வழிகாட்டுதலின்படி, வெற்றிகரமாக தரையிறங்கி உயிர் தப்பியதாக ஜோன்ஸ் தெரிவித்தார். ஜோன்சிற்கு காக்கை வலிப்பு நோய் உள்ள போதும், கடந்த 4 வருடங்களாக அவர் சுய நினைவை இழக்கவில்லை.
இதையடுத்து மருத்துவர்கள் ஜோன்சின் உடல்நிலைக்கு நற்சான்றிதழ் வழங்க, பர்லேன் அவருக்கு ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்க தொடங்கினார். இதுவரை ஸ்கை டைவிங்கில் 5 ஆவது நிலை வரை ஜோன்ஸ் வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதுர்யமாக செயல்பட்டு தனது உயிரை காத்த பயிற்சியாளர் பர்லேனுக்கு மரியாதை செலுத்தினார் ஜோன்ஸ்.