மாயமான விமானத்தை முடியும் வரை தேடுவோம்: ஆஸ்திரேலிய பிரதமர்
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை கடலின் தரைபரப்பில் தேடும் இடத்தின் அளவு அதிகரிக்கப்படும் என்று ஆஸ்திரேலேய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக விமானத்தை தேடும் பணியில் பல நாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலான ப்ளூஃபின் 21ம் கடலின் தரை பரப்புக்கு சென்று விமானத்தை தேடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இதுவரை விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் கூறுகையில்,
மலேசிய விமானத்தை கடலின் தரை பரப்பில் தேடும் இடத்தின் பரப்பளவு அதிகரிக்கப்படும். இந்த தேடலில் ஆழ்கடலில் தேடுவதில் வல்லவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். வானிலை அனுமதித்தால் விமானத்தை தேட 6 முதல் 8 மாதங்கள் ஆகும். மனிதர்களால் முடிகின்ற அளவு வரை விமானத்தை தேடுவோம் என்றார்.
கடந்த 8ம் தேதி கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல்கள் கிடைத்த இடத்தில் தான் தற்போது விமான தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications