ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு அமீரக சிறையில் கம்பி எண்ணும் ஆஸி. பெண்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஆஸ்திரேலிய பெண் ஃபேஸ்புக்கில் ஒருவரை பற்றி தவறாக எழுதியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜோடி மேகி(39). கிராபிக் கலைஞரான அவர் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் அபுதாபியில் தான் வசிக்கும் அபார்ட்மென்ட் முன்பு நின்று கொண்டிருந்த காரை புகைப்படம் எடுத்து அதன் பதிவு எண்ணை மறைத்துவிட்டு அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். புகைப்படத்துடன் அவர் யார் பெயரையும் தெரிவிக்கவில்லை.
அந்த புகைப்படத்தை வெளியிட்ட காரணத்திற்காக அவர் சட்டப் பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் ஒருவரை தவறாக பேசியதாகக் கூறி அவருக்கு ரூ.2.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த சென்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து மேகி கூறுகையில்,
நான் எதுவும் சட்டவிரோதமாக செய்யவில்லை. இன்டர்நெட்டை தான் பயன்படுத்தினேன். யாரும் என்னிடம் என்ன நடக்கிறது என்பதை கூற மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்றார்.
மேகிக்கு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.