ஆஸ்திரியாவை அலறவிடும் கொரோனா.. ஊரடங்கு மட்டும் போதாது.. அதிபர் அலெக்சாண்டர் எடுத்த அதிரடி முடிவு
வியன்னா: கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் குறித்தும் அந்நாட்டு அதிபர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் மட்டும் தீவிர வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன.
இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மருத்துவமனையில் ஜோபிடன்.. அமெரிக்க அதிபராக ஒன்றரை மணி நேரம் செயல்பட்ட கமலா ஹாரிஸ்!
கொரோனா வேக்சின்
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் முதல் அலையை ஏற்படுத்தியது. ஆல்பா. டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்துவதால் இது பெரும் பாதிப்பாக உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகின்றன.
முழு ஊரடங்கு
சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு சில மாதங்கள் வரைக் கட்டுக்குள் இருந்தாலும் அவை திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகின்றன. கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த முயற்சிகள் பெரியளவில் பயன் தரவில்லை. கொரோனா பரவல் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், வேறு வழியின்றி அந்நாட்டு அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
என்ன காரணம்
இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமை முதல் அமலில் இருக்கும் என்றும் 10 நாட்களுக்குப் பிறகு நிலைமையைப் பொறுத்து ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனா வேக்சின் பணிகள் மந்தமாக இருப்பதே அதிக கொரோனா கேஸ்களுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. அங்குள்ள மக்கள்தொகையில் 66% பேருக்கு முழுவதுமாக வேக்சின் போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்றே குறைவாகும்.
வேக்சின் கட்டாயம்
பல மாதங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் கூட அதிகளவிலான மக்களை வேக்சின் எடுத்துக் கொள்ள வைக்க முடியவில்லை என்றும் வேக்சின் போடாதவர்கள் நாட்டின் சுகாதார நெட்வொர்க்கில் பெரிய தாக்குதலை நடத்துவதாகவும் அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் குற்றஞ்சாட்டினார். வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் கொரோனா அதிகம் பரவுவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வேக்சினை கட்டாயமாக்க ஆஸ்திரியா முடிவெடுத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
மறுபுறம் வரும் திங்கட்கிழமை முதல் அங்கு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 15,000 பேருக்குப் புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் விரைவாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
ஆஸ்திரியா மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டின் பொதுமக்கள் வீடுகளிலும் மாஸ்க்குகளை அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஜெர்மனியில் வேக்சின் செலுத்தாதவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.