பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
மனாமா பஹ்ரைன்: பஹ்ரைனில் இயங்கிவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
செப்டம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு (பஹ்ரைன் நேரம்) நேரலை நிகழ்ச்சியாக இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது அன்னை தமிழ் மன்றம். பஹ்ரைனில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு, தமிழை இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பு, கடந்த ஆண்டு முதன்முதலாக கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதிய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்ததன் விளைவாக சுமார் 30 மாணவர்கள் 2019-20 கல்வியாண்டில் தமிழ் மொழித் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றனர். இவர்களில் 10 மாணவ மாணவியர் 90 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்று வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களின் ஆர்வத்தையும், இவர்களது பெற்றோரின் ஊக்குவிப்பையும் கௌரவிக்கும் நோக்கத்தோடு அன்னை தமிழ் மன்றம் இந்த பாராட்டு விழாவினை முன்னெடுத்தது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து, இணையவாயிலாகவே, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கொரோனா பாதிப்பினால் ஓரிடத்தில் கூடி இந்த விழாவை நடத்த இயலாத காரணத்தால் இதனை இணையம் வாயிலாக நடத்தினார்கள். தமிழில் வெற்றி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் முன்னதாகவே அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்களின் இல்லங்களுக்கே சென்று பெற்றோர் கையினாலேயே பதக்கம் அணிவித்து, நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.
இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது?
இந்த புகைப்படத் தொகுப்பும், காணொளித் தொகுப்பும் விழாவின் போது ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவினை அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பஞ்சு ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்கள். பஹ்ரைன் தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மு. தாமரைக் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மு. அப்துல் பாசித், மன்றத்தின் செயல்பாடுகளை விளக்கி உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் பெயர்களை பஞ்சு ராஜ்குமார் வாசிக்க, மாணவ மாணவியரின் புகைப்படங்களை அனைவரும் திரையில் கண்டு மகிழ்ந்தனர்.
அடுத்ததாக தமிழகத்திலிருந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ. விசயராகவன் தலைமையுரை ஆற்றினார்கள். தனது உரையின் போது தமிழ் மொழியின் சிறப்பையும், தற்போது பரவியிருக்கும் கொரோனா நோயை எதிர்க்கக் கூடிய அனைத்து சிறப்புகளும் நமது தமிழ் மருந்துகளுக்கு உண்டென்றும், குறிப்பிட்டார்கள். தமிழ் படித்த மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் பெரிதும் பாராட்டிப் பேசினார்கள். அடுத்ததாக தமிழகத்திலிருந்து அமைச்சர் க. பாண்டியராஜன் விழாப் பேருரை ஆற்றினார்கள். அவர் தமது உரையி;ல், உலகத் தமிழ் சங்கங்களை எல்லாம் இணைக்கும் முயற்சியில் உள்ளதாகவும், அதற்கு சான்றாக இது போன்ற தமிழ்ச் சங்கங்கள் எல்லா நாடுகளிலும் இயங்கி வருவதைக் குறித்து தான் பெருமையடைவதாக குறிப்பிட்டார்கள். மேலும், எல்லா மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தினார்கள். அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான தமிழ் படிக்கும் மாணவர்களை தான் பார்க்க விரும்புவதாகவும், அடுத்த முறை நேரில் வந்து வாழ்த்துவேன் என்றும் கூறினார்கள்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் விழாவில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு மாணவ மாணவியரின் பெயர்களைச் சொல்லி அழைத்து, அவர்களோடு கலந்துரையாடினார். மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து மகிழ்வித்தார். இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியைக்கும் பாராட்டு தெரிவித்தார். பெற்றோர்களை வெகுவாகப் பாராட்டினார். மேலும் இவ்விழாவினை ஏற்பாடு செய்த அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியினை பாராட்டி, தமிழக அரசு சார்பாக என்ன விதமான உதவிகள் தேவைப்பட்டாலும் தயங்காமல் கேட்கும்படியும், தமிழை உயர்த்த எவ்வகையான உதவிகள் செய்வதற்கும் தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் பாண்டியராஜன். அடுத்தபடியாக மாணவ மாணவியருக்கு விருதுகள் வழங்கிய ஒரு காணொளிக்காட்சி திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் கண்டு ஆர்ப்பரித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் விழா சிறப்புரை ஆற்றினார்.
அவர் உரையின் போது, இன்றைய காலகட்டத்தில் தமிழ் நாட்டில் உள்ள மாணவர்களை தமிழ் படிக்க வைப்பது கடினமாக உள்ளது. இந்த நிலையில் அயல்நாட்டில் தமிழ் பிள்ளைகள் மிகவும் உற்சாகத்தோடு தமிழ் பயின்றுள்ளார்கள் என்று கூறி அவர்களை மனமார வாழ்த்தினார்கள். குறிப்பாக தமிழாசிரியை அவர்களைப் பாராட்டினார்கள். மிகக் குறுகிய காலத்தில் பயிற்றுவிப்பது என்பது இலகுவான காரியமல்ல என்பதை சுட்டிக் காட்டினார்கள். திருக்குறளை மேற்கோள் காட்டி, திருக்குறள் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளது. அது நமது வாழ்வின் எல்லா பகுதிகளைக் குறித்தும் சொல்லுகிறது என்று பேசினர்.அடுத்ததாக சினாஸ் சுல்தானா என்ற மாணவி, நன்றி தெரிவித்தார். இந்த விழாவை முன்னெடுத்த அன்னை தமிழ் மன்றத்திற்கும் நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினார் மா. பழனிச்சாமி, நன்றியுரை நிகழ்த்தினார். இத்துடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் இணைய சந்திப்பு (ZOOM MEETING APPLICATION) மூலமாக மாணவ மாணவியர் அவர்களது பெற்றோர் மற்றும் அன்னை தமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் என்று சுமார் 100க்கும் அதிகமானபேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நேரலையாக முகநூல் (FACEBOOK) இணைப்பிலும், யூடியூப் (YOUTUBE)இணைப்பிலும் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியினை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஏறக்குறைய 20,000 (இருபதினாயிரம்) பேர் கண்டுகளித்தனர்.