"இஸ்ரேல் பாணியை கடைபிடிக்கும் இந்தியா" -மீண்டும் மல்லுக் கட்டும் பிலாவல் பூட்டோ!
இஸ்லாமாபாத்: பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துவதைப் போல இந்தியா தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிலாவல், ‘பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களைப் போல் காஷ்மீர் பகுதியும் பாகிஸ்தானுக்கு சொந்தமானதுதான். ஆகையால், அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது' என கூறியிருந்தார்.
இப்படி பிலாவல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அதே மேடையில் முன்னாள் பிரதமர்களான யூசூப் ராசா கிலானி மற்றும் ராஜா பர்வேஸ் அஷரப் ஆகியோர் உடனிருந்தனர்.
Another attack on LOC. seems India adopting Israle model vs Pakistan.Modi must realize we can retaliate unlike his victims from Gujarat.
— BilawalBhuttoZardari (@BBhuttoZardari) October 7, 2014
இந்த பேச்சு இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொந்தளிப்பு அடங்கும் முன்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நிலவி வரும் தற்போதைய நிலவரம் குறித்து தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிலாவல் பூட்டோ மீண்டும் இந்தியாவை சீண்டிப் பார்த்துள்ளார்.
'எல்லைக் கோட்டுப் பகுதியில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விவகாரத்தில் (காஸா பகுதியின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது) இஸ்ரேலின் போக்கை இந்தியா பின்பற்றுவதாக தோன்றுகின்றது.
குஜராத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தானால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்பதை மோடி உணர்ந்துக் கொள்ள வேண்டும்' என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.