வங்கதேசத்தில் தொழுகையின் போது தாக்குதல்: ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை- மற்றொருவன் பிடிபட்டான்!!
டாக்கா: வங்கதேசத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்த இடம் அருகே பயங்கரவாதிகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான்.
வடக்கு வங்கதேசத்தின் கிஷோரிகஞ்ச் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரம்மாண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் 2,00,000 பேர் பங்கேற்றனர்.
இத்தொழுகை நடந்த இடத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் பலியாகினர்.12 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான். மற்றொருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். உயிரோடு பிடிபட்ட தீவிரவாதி கூறுகையில், பொதுமக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தவே தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளான்.
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியாகி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐஎஸ் இயக்கம் வெளியிட்ட வீடியோ பதிவில், வங்கதேசத்தில் தாக்குதல்கள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.