நைஜரில் ராணுவத்தினர் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 32 வீரர்கள் உயிரிழந்தனர்
நைஜர்: நைஜீரியாவின் அண்டை நாடான நைஜரில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டன. "மேற்கத்திய நவீனக் கல்வி" போகோ ஹராம் இயக்கத்துக்கு மிகவும் வெறுப்பைத் தரும் வார்த்தைகள். இஸ்லாமிய வழி கற்பித்தல் தான் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் (போகோ ஹராம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே ‘மேற்கத்தியக்கல்விக்குத் தடை' என்பதுதான்.) என்ற கொள்கைக்கு இடைஞ்சலாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது இந்த அமைப்பு.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அடிக்கடி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினர், அப்பாவி கிராம மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்துகின்றனர். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டு வருகிறது.
நைஜீரியாவைப் பொறுத்தவரையில் அரசு படைகளுக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்துவரும் கடும் போரினால் இதுவரை 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதேபோல் அண்டை நாடான நைஜர் நாட்டிலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து எல்லைப்பகுதி வழியாக நைஜர் நாட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், போசோ நகரில் ராணுவ நிலைகள் மீது நேற்று தாக்குதல் நடத்தினர். ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. எல்லைப்பகுதியில் இந்த சண்டை நடந்ததால் நைஜீரிய ராணுவமும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் நைஜரைச் சேர்ந்த 30 வீரர்களும், நைஜீரியாவின் 2 வீரர்களும் என மொத்தம் 32 பேர் உயிரிழந்ததாக நைஜர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று அதிகாலையில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அனைத்து நிலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.