சுவருக்குப் பின்னால் மகனை 4 ஆண்டுகள் சிறை வைத்த அமெரிக்க தந்தை கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் செயற்கையாக உருவாக்கிய சுவருக்குப் பின்னால் சுமார் நான்கு ஆண்டு காலமாக சொந்த தந்தையாலேயே சிறை வைக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவனைப் போலீசார் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்த கிரேகர் ஜீன் (37), தனது மனைவி மற்றும் மகனைப் பிரிந்து, மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையைப் பார்ப்பதற்காக புளோரிடா வந்துள்ளான் கிரேகர் ஜீனின் 13 வயது மகன். ஆனால், அச்சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக கிரேகர் ஜானிடம், அவரது முன்னாள் மனைவி விசாரித்த போது, ‘மீண்டும் தாயிடம் செல்கிறேன்' எனக் கூறி சிறுவன் புறப்பட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, காணாமல் போன தனது மகனை, அத்தாய் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நாள் அச்சிறுவன் தனது தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளான். அப்போது, தந்தை தன்னை அட்லாண்டாவில் உள்ள வீட்டில் சிறை வைத்திருப்பதாக அச்சிறுவன் கூறியுள்ளான்.
போலீசாரின் உதவியுடன் கிரேகரின் வீட்டிற்கு சென்ற சிறுவனின் தாய், எவ்வளவோ தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. ஆனால், அசராத போலீசார் மீண்டும் ஒரு நாள் கிரேகரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வீட்டில் கை-கால், கண் துடைக்க பயன்படும் துண்டுகளால் பொய்யான சுவர் ஒன்றை கிரேகர் அமைத்திருந்ததையும், அதற்குப் பின்புறம், தனது மகனை அவர் சிறை வைத்திருப்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.
உடனடியாக சிறுவனை மீட்ட போலீசார், இது தொடர்பாக கிரேகர், அவரது இரண்டாவது மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications