விஷப் பாம்பின் குரல்வளையை அலேக்காக கடித்துத் துப்பிய குழந்தை
ரியோ: பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது சிறுவன் விளையாட்டுச் சாமான் என நினைத்து விஷப் பாம்பை கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரில் வசித்து வருபவர்கள் ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டி'சோஸா தம்பதி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ ஆவான். குழந்தையை அருகில் உள்ள புல்வெளியில் விளையாடவிட்டுவிட்டு அவனுக்கு பால் எடுத்து வருவதற்காக டிசோசா விட்டிற்குச் சென்றார்.
அடுப்பில் பால் காய்ச்சிக்கொண்டிருந்த அவர், குழந்தையிடமிருந்து சத்தம் ஏதும் வராததையடுத்து சந்தேகப்பட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுவனின் கையில் ரத்தம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் அருகில் ஜராரக்கா வகையைச் சேர்ந்த விஷப்பாம்பு ஒன்று இறந்துகிடந்ததைக் கண்டார். சிறுவனை பாம்பு கடித்துவிட்டதாக எண்ணி செய்வது அறியாது திகைத்தார்.
அந்த பாம்பை ஒரு பாட்டிலில் போட்டு எடுத்துக்கொண்ட அவர், பதறிப்போய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தனர்.
மேலும் சிறுவன் அந்த பாம்பை விளையாட்டுப் பொருளாகவோ, பொம்மையாகவோ எண்ணி கடித்திருக்கக் கூடும் என்றும், சிறுவன் கடித்தது பாம்பின் கழுத்துப் பகுதி என்பதால், பாம்பு சிறுவனின் பிடியிலிருந்து விலகமுடியாமல் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்தனர்..
சிறுவன் கடித்து கொன்ற பாம்பு பிரேசில், அர்ஜென்டீனா மற்றும் பராகுவே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்ற ஜராரக்கா எனும் கொடிய விஷப் பாம்பாகும்.
Menino de um ano e cinco meses mata ‘jararaca’ a mordidas https://t.co/mkiMGzFCmY pic.twitter.com/3oIYBJReNj
— Itaporanga Online (@itaporangaon) November 2, 2015
பொதுவாக, இத்தகைய பாம்புகள் கடித்து, அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல் இருந்தால் ரத்த கசிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட அபாயகரமான அறிகுறிகளுடன் உடல் நலக் கோளறு ஏற்படும். ஆனால், இச்சிறுவன் அந்த பாம்பை கடித்துக் கொன்று அதிர்ஷ்டவசமாக நல்ல முறையில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.