போர்க்குற்றம்: இலங்கையின் விசாரணைகளை ஏற்க முடியாது- கேமரூன் அதிரடி
லண்டன்: இலங்கையில் கடைசி யுத்தத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை நடத்தும் போலியான விசாரணைகளை ஏற்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.
இலங்கையின் வடபகுதிக்கு முதல் முறையாக பயணம் செய்ததின் நோக்கம் மற்றும் அங்குள்ள தமிழர் நிலை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விளக்கமாகப் பேசினார் கேமரூன்.
தன் பேச்சின்போது, "வட பகுதியில் நடந்த போரில் மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிச் செல்ல இலங்கைக்கு இடமளிக்க போவதில்லை. அதேபோல போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை நடத்தும் போலியான விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச அளவில் சுயாதீன விசாரணை அவசியம்," எனவும் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை எதிராக குரல் எழுப்பினர்.
கேமரூனின் யாழ்ப்பாண பயணம் மற்றும் அவரது அதிரடியான கருத்துக்களை வரவேற்பதாக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.