பலருடன் உறவு கொண்டால் குரங்கு அம்மை பரவுமா? ஆணுறை பலனளிக்காதா? ஆய்வாளர்களின் விளக்கம் என்ன?
ஜெனிவா: கொரோனா தொற்று பாதிப்பையடுத்து தற்போது உலகம் முழுவதும் புது அச்சுறுத்தலாய் உருவெடுத்துள்ள குரங்கு அம்மை தொற்று நோய், பலருடன் உடலுறவு கொள்வதால் வேகமாக பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவலாம் என்றும் WHO எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் 75 நாடுகளில் தற்போதுவரை சுமார் 16,000க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல்கள் வௌியாகியுள்ளன.

குரங்கு அம்மை
கடந்த 2019 முதல் தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று சுமார் 63,82,183 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து விடுபட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது. இந்நிலையில் மனித இனத்திற்கு அதுவும் குழந்தைகளுக்கு புதிய அச்சுறுத்தலாக குரங்கு அம்மை உருவாகியுள்ளது. இந்த தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு அவசர நிலையையும் அறிவித்தது.
இந்த குரங்கு அம்மை பாதிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இந்த தொற்று எலி, அணில் போன்ற கொறித்துண்ணி விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்பது, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரோடு நெருங்கிய தொடர்பு, கொப்புளங்களில் இருந்து வரும் நீர் கலப்பு ஆகியவற்றால் பரவுகிறது.

அறிகுறிகள்
முதல் முதலில் குரங்குகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்கள் என பாலூட்டிகளை தாக்கும் குரங்கு அம்மை, பெரியம்மை வகை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரசால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம்.
உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது நேற்று மேலும் ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

காரணம்
இந்நிலையில் தொற்று வேகமாக பரவுவதற்கான காரணத்தை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் விளக்கியுள்ளார். அதன்படி, இந்த வைரஸ் தொற்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மத்திய ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று மேற்கு ஆப்ரிக்காவை மையமாக கொண்டது. இதில் மத்திய ஆப்ரிக்காவை மையமாக கொண்ட வைரஸ் தீவிர தன்மைகொண்டது என விளக்கியுள்ளார். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணைகளை கொண்டுள்ளவர்கள் மற்றும் பைசெக்ஷூவல் என அழைக்கப்படும் தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களிடையேயும் இந்த தொற்று வேகமாக பரவுவதாக அதானோம் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுகள்
இந்த தொற்று பாதிப்பு குறித்து 528 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு குறித்து அதன் முடிவுகளை New England Journal of Medicine வெளியிட்டிருந்தது. ஆய்வின் முடிவில் 95 சதவிகிதத்தினர் பாலியல் நடவடிக்கை மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 98 சதவிகிதத்தினர் பைசெக்ஷூவல் அல்லது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, அவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது போன்றவற்றின் மூலம் தொற்று எளிதாக மற்றவருக்கு பரவும் என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் திரேன் குப்தா ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாது, தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அசுத்த ஆடைகளை தொடும்போதும் வைரஸ் பரவும் என்றும் திரேன் குப்தா கூறியுள்ளார்.

பரவல்
தொற்று பரவல் விவகாரத்தில் ஆணுறை எந்த விதத்திலும் பயனளிக்காது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நோயாளிகளின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய எலக்ட்ரிக் பொருட்கள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்து அவருக்கு அறிகுறி ஏதும் இல்லையெனில் அவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவுமா என்பது குறித்து ஆய்வுகள் இன்னும் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications