படுத்த படுக்கையாக கிடப்பவர்களை கருணைக் கொலை செய்யலாம்... கனடாவில் புதிய சட்டம்!
ஒட்டாவா: தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயோதிகம் காரணமாக படுத்த படுக்கையாக கிடப்பவர்களை கருணைக் கொலை செய்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்டமசோதா கனடா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நோயாளியின் விருப்பத்தின் பேரில் மருத்துவரின் உதவியுடன் அவரது உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்யுதல் கருணைக் கொலை எனக் கூறப்படுகிறது.

சமயங்களில் நோயாளிகளின் விருப்பத்தை பெற இயலாத சூழ்நிலையும் ஏற்படுவதுண்டு. அதாவது உயிரைப் பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தைகள், ஆண்டுக்கணக்கில் கோமாவில் இருக்கும் நோயாளிகள் போன்றோரிடம் அனுமதி பெற இயலாத சூழ்நிலைகளிலும் கருணைக் கொலை செய்யப்படுகின்றன.
இவ்வாறு கருணைக் கொலை செய்வது பல்வேறு நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடா நாட்டில் கருணைக் கொலை செய்து கொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் உதவியுடன் தனது உயிரை கவுரவமான முறையில் போக்கிக் கொள்ள உதவும் இந்த சட்டம் வரும் ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் இளம்வயது நபர்கள் இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் தேட முடியாது.
இந்த சட்டத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் நபர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக இதற்கென உருவாக்கப்படும் குழுவிடம் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மனமாற்றம் பெற்றால், கருணைக் கொலை அனுமதியை திரும்பப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டம் கனடா நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டினருக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications