திருமண செலவைக் குறைத்து, சிரியா அகதிகளுக்கு உதவிய கனடா தம்பதியினர்
கனடா: சிரியாவில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பா மற்றும் கனடாவில் தஞ்சம் அடைந்தனர்.அவர்களுக்கு உதவும் வகையில் கனடாவில் உள்ள ஒரு தம்பதி, ஆடம்பரமாக நடைபெறவிருந்த தங்களது திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த பணத்தை கனடாவில் அகதிகளுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
சிரியாவின் கோபானி நகரில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக கனடாவில் தஞ்சம் அடைவதற்காக பல அகதிகள் கடலில் ரப்பர் படகுகளில் பயணம் செய்தனர். அப்போது துருக்கி அருகே அவர்கள் பயணம் செய்தபோது அதிக எடை காரணமாக படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது ஆய்லன் என்ற சிறுவனின் உடல் கரையோரத்தில் ஒதுங்கிய புகைப்படம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கனடா நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள சிரியா நாட்டவர்க்கு உதவும் விதமாகவும், அவர்களை மறு குடியமர்த்தவும் சுமார் 17,500 அமெரிக்க டாலர்களை ஒரு தம்பதி நிதியாக வழங்கியுள்ளனர்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஜாக்சன் மற்றும் பார்சின் ஆகிய இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆடம்பரமாக நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 130 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென தங்களது திருமணத்தை எளிய முறையில் நடத்தி அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 17,500 அமெரிக்க டாலர்களை சிரியா அகதிகளின் நிவாரணத்துக்காகவும், மறு குடியமர்த்தவும் நிதியாக அளித்துள்ளனர். மேலும் அவர்களது திருமணத்திற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் வழக்கமான பரிசு பொருட்களை அளிக்காமல், அவர்களால் முடிந்த உதவித்தொகையை வழங்கினர். இந்தத் தம்பதியினரின் செயலை அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.