மாயமான விமான தேடல்: இந்திய பெருங்கடலில் மரப்பலகை, பெல்ட்டுகளை பார்த்த ஆஸ்திரேலியா
பெர்த்: தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு மரப்பலகை மற்றும் பெல்ட்டுகள், ஸ்டிராப்புகளை பார்த்ததாக தெரிவித்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் விமானங்கள், கப்பல்கள் மூலமாக தேடுதல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடலில் மரப்பலகை, பெல்ட்டுகள் மற்றும் ஸ்டிராப்புகளை தேடல் பணியில் ஈடுபட்டுள்ள விமானத்தில் இருந்தவர்கள் பார்த்ததாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரி மைக் பார்டன் கூறுகையில்,
மரப்பலகை மற்றும் அதை சுற்றி பல்வேறு பொருட்கள், பல வண்ண பெல்ட்டுகள், நீளமான ஸ்டிராப்புகள் மிதந்தது பார்க்கப்பட்டுள்ளது. அதை மறுபடியும் தேட முயன்றபோது கிடைக்கவில்லை. இன்று 4 ராணுவ விமானங்கள் மற்றும் 4 பயணிகள் விமானங்கள் அதே பகுதிக்கு சென்று அந்த பொருட்கள் கிடைக்குமா என்று பார்க்க உள்ளன. விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களை பேக் செய்ய அந்த வகை மரப்பலகைகள் பயன்படுத்தப்படும். ஆனால் அவை கப்பல் துறையிலும் பயன்படுத்தப்படும் என்றார்.