ஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சம்- தனிநாடாக பிரிய அக்.1ல் வாக்கெடுப்பு நடத்தும் கேட்டலோனியா மாகாணம்!
ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனிநாடாக பிரிய பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா மாகாணம் தனிநாடாக பிரிவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ளது அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் தேசிய இனம் தனிநாடாக பிரிவதற்கான பொதுவாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை.
இப்பொதுவாக்கெடுப்பில் குர்திஸ்தான் இனத்தவர் பெருமளவில் பங்கேற்றனர். இன்னமும் இதன் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. குர்திஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈராக் அச்சுறுத்தி வருகிறது.
கேட்டலோனியா பொதுவாக்கெடுப்பு
இந்நிலையில் ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணம் தனிநாடாக பிரிவதற்கான பொதுவாக்கெடுப்பை வரும் அக்டோபர் 1-ந் தேதி நடத்த உள்ளது. இதற்கு ஸ்பெயின் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
பார்சிலோனா
ஸ்பெயினின் பார்சிலோனாவை தலைநகராக கொண்டது கேட்டலோனியா என்கிற தன்னாட்சி பெற்ற மாகாணம். கேட்டலோனியா மாகாணத்துக்கு தனி நாடாளுமன்றம் உண்டு. அங்கு மொழி அல்லது இன அடிப்படையிலான எந்த ஒடுக்குமுறையும் ஸ்பெயின் மத்திய அரசால் நிகழ்த்தப்படவில்லை.
இதுதான் பிரச்சனை
அப்படி என்னதான் கேட்டலோனியாவில் பிரச்சனை என்கிறீர்களா? 2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்தித்த போது கேட்டலோனியா மாகாணம் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. தொழில்வளர்ச்சி மிகுந்த மாகாணமாக கேட்டலோனியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.
மத்திய அரசின் பாரபட்சம்
ஸ்பெயின் கூட்டரசில் மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தக் கூடிய மாகாணம் கேட்டலோனியா. அதேநேரத்தில் வரி குறைவாக செலுத்தும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுதான் கேட்டலோனியாவுக்கும் கிடைத்தது. ஸ்பெயின் மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையானது கேட்டலோனியா மக்களை தனிநாடு முழக்கத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
2014 பொதுவாக்கெடுப்பு
கடந்த 2014-ம் ஆண்டும் கேட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதை ஸ்பெயின் அரசு நிராகரித்து சட்டவிரோதமானது என அறிவித்தது. தற்போதும் பொதுவாக்கெடுப்புக்கு ஸ்பெயின் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தன்னாட்சி ரத்து
இந்த தடையை மீறி பொதுவாக்கெடுப்பை கேட்டலோனியா நடத்தினால் அந்த மாகாணத்தின் தன்னாட்சி உரிமையை ஸ்பெயின் மத்திய அரசு பறிக்க வாய்ப்புள்ளது., அதாவது இந்தியாவில் மாநில அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை செயல்படுத்துவது போல கேட்டலோனியா நிர்வாகத்தை ஸ்பெயின் மத்திய அரசு எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.